2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டம்
அதன் தலைவர் பி.சி. சாக்கோ தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில் பாரதிய ஜனதா கலந்துகொள்ளும் என தகவல்கள்
தெரிவிக்கின்றன. 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நாடாளுமன்ற
கூட்டுக் குழு விசாரணை நடத்தும் வகையில், அவருக்கு சம்மன் அனுப்பக் கோரி
கடந்த சில கூட்டங்களை பாரதிய ஜனதா புறக்கணித்து வந்தது.
இதனிடையே, தற்போதைய கூட்டத்தில் பாரதிய ஜனதா பங்கேற்கும் என்று
கூறப்படுவதற்கு பி.சி. சாக்கோ வரவேற்பு தெரிவித்துள்ளார். எனினும்,
பிரதமருக்கு சம்மன் அனுப்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்
கூறியுள்ளார். மேலும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிகளில் 75 சதவிகிதம்
மட்டுமே முடிந்துள்ளதால், அதற்கு கால நீட்டிப்பு தேவை என்றும் அவர்
தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் வரும்
டிசம்பருடன் முடிவடைகிறது.