வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வரும் 30 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத் தற்காலிக நீதிபதி முடிகவுடர் உத்தரவிட்டுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதால் பணி நிமித்தமாக நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த முறை மட்டும் மனுவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததுடன், இனிமேல் வழக்கு விசாரணைக்கு வரும் ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து சிறப்பு நீதிமன்ற தற்காலிக நீதிபதியாக முடிகவுடர் பொறுப்பேற்றுள்ளார்.